முகத்திரையை கிழித்த மரண தண்டனை

Posted 11:40 by orumaipadu mandram in

தமிழகத்தில், வழக்கமாக, சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் இடம் பெறும் தேசிய, மாநிலக் கட்சிகள் தாண்டிய, மக்கள் இயக்கங்களின் போராட்ட நடவடிக்கைகள், அவ்வளவாக ஊடகக் கவனம் பெறுவதில்லை. அவை முக்கிய நிகழ்வுகளாகக் காணப்படுவதில்லை. ஆனால், இம்முறை, திமுக, அஇஅதிமுக கட்சிகளோ, இரண்டாம் மூன்றாம் நிலைக் கட்சிகளான மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவையோ, வழமையான தமிழ் தேசிய கட்சிகளோ வழிநடத்தாத, மக்கள் போராட்டங்கள், முன் எழுந்து வந்தன. நீதிமன்ற, சட்டமன்ற கவனம் பெற்றன. செல்வாக்கு செலுத்தின.

போராட்டங்களில், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், படித்த மற்றும் இதர நடுத்தர மக்கள், சாமானிய மக்கள், தொழிலாளர்கள் போன்ற பல பிரிவினரும் ஈடுபட்டனர். வைகோ, சீமான் வகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள், அம்மாவின் தாயுள்ளத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் தேசியம் பேசுபவர்கள், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தேசிய இனங்களுக்கு விரோதியான வன்மையான இந்திய அரசை, ஸ்ரீலங்கா -பாகிஸ்தான் - சீனா அச்சுக்கு எதிராக நிற்குமாறு அழைப்பு விடுக்கிறார்கள். ஜெயலலிதாவும் இந்திய அரசும், ஸ்ரீலங்காவில் சிங்களப் பேரின வாதத்தால் வேட்டையாடப்படும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். இது, புலி ஆட்டை பாதுகாக்கும், முதலாளித்துவமும் கிராமப்புற மேட்டுக் குடியினரும் முறையே தொழிலாளர்களையும் விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாப்பார்கள் என்ற கருத்திற்கு ஈடானதாகும்.

மன்மோகன் தலைமையிலான அய்முகூ அரசை திரும்பத் திரும்ப நாடாளுமன்றத்தில் காப்பாற்றும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரசின் கே.வி.தங்கபாலு, விஸ்வ இந்து பரிஷத், சுப்பிரமணியசாமி ஆகியோர் மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்ற கருத்தில் உறுதியாய் நின்றார்கள்.

பிருந்தா காரத் சட்டப்படிதான் எதுவும் எனச் சொல்லி, மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டைப் புலப்படுத்தினார். நெஞ்சில் ஈரமுள்ள சட்டமன்றத்தின் கருணை என்றார் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றத் தலைவர் சவுந்தரராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனோ ஜெயலலிதா ஒரு பெண் என்ற விதத்தில் தலையிடுமாறு வேண்டுகின்றார். தமிழர்களைக் காப்போம், மரண தண்டனையே கூடாது என்ற குரல்களும் கூட போராட்ட இயக்கத்தில் ஒலிக்கவே செய்தன.

கருணாநிதியின் கயமை சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் அம்பலப்படுத்தப்பட்டது. 2000ல் மூவர் கருணை மனுவை கருணாநிதி நிராகரித்தார். இப்போதும், நீண்ட காலம் சிறையில் இருந்தவர்கள் என்ற காரணத்தால்தான் தலையிடுகிறாராம்.

அம்மையார் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 72, 161, 257 என்றெல்லாம் காரணம் சொல்லி தலையிட மறுத்தார். முந்தைய நாள் மறுத்ததையே மறுநாள் தீர்மானமாகப் போடும்போது, அதே 72ம், 161ம், 257ம் தடுக்கவில்லை என்பதை, தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 72ல் மரண தண்டனையைக் குறைக்கும் அதிகாரம், குடியரசுத் தலைவருக்கு (மத்திய அரசுக்கு) தரப்பட்டுள்ளது. பிரிவு 72 (3) குடியரசுத் தலைவரின் (மத்திய அரசின்) இந்த அதிகாரம், ஆளுனர் (மாநில அரசு) அதிகாரத்தை செலுத்துவதைப் பாதிக்காது என, திட்டவட்டமாகச் சொல்கிறது. பிரிவு 161 ஆளுனருக்கு (மாநில அரசு) சுதந்திரமாக மரண தண்டனை குறைப்பு அதிகாரம் தந்துள்ளது. பிரிவு 257 மத்திய அரசு மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என சில விசயங்களில் வழிகாட்டுதல் தருவது பற்றிக் குறிப்பிடுகிறது. மூவரின் கருணை மனு, 11 ஆண்டுகள் தாமதமானதாலேயே, அது குறித்த நீதிமன்ற தீர்ப்புகளையும் கணக்கில் கொண்டு, சுதந்திரமாக மாநில அரசு பிரிவு 161ன் கீழ் மரண தண்டனையைக் குறைக்குமாறு ஆளுனருக்கு பரிந்துரைக்க முடியும். இதற்கு எந்த சட்டத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஜெயலலிதா மக்கள் விருப்பத்திற்கும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப் பளித்து, மூவர் மரண தண்டனை குறைப்பு தீர்மானம் கொண்டு வந்தாரே தவிர, தமது சொந்த விருப்பத்தால் அல்ல என்பதை தமிழகம் பதிவு செய்து கொள்ளும். இதே ஜெயலலிதா நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட போது பொங்கியெழுந்து பேசியதை, 2008ல், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதமாவது பற்றியும், நளினியின் தண்டனை குறைக்கப்பட்டது பற்றியும் ஜெயலலிதா கண்டித்து அறிவிப்பு வெளியிட்டதை, தமிழ் தேசியம் பேசுபவர்கள் மறக்கலாமே தவிர, தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை கூடாது, பொதுவாக மரண தண்டனையே கூடாது என்ற குரல்களின் பின்னால் உள்ள உணர்வுகளை மதிக்கலாம். ஆனால், பிரச்சனையின் ஜனநாயக மற்றும் அரசியல் இயல்புகளின் தீவிரத்தை, இந்த வாதங்கள் நீர்த்துப் போக வைக்கும் என்பதையும் காண வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதையோ, அரசியல் ஒடுக்குமுறை ஏவப்பட்டதையோ, அதில் பேரறிவாளன் போன்றோர் பலியானதையோ எப்படி மறக்க முடியும்?

பேரறிவாளன் தடா என்ற ஆள்தூக்கி ஆட்கொல்லி சட்டத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். தடா சட்டம் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பொருந்தாது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், அவரது தண்டனைக்கு ஆதாரமாக்கப்பட்டது. இரண்டு ஒன்பது ஓல்ட் பேட்டரிகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது அரசியல் படுகொலை இல்லையா? பதினொரு ஆண்டுகளுக்கு மேல் கருணை மனுவின் மீது உத்தரவிடாமல் இருந்தது, இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருந்து, இப்போது தூக்கு தண்டனை என்பது, ஜனநாயக உரிமைகள் மீறல், மனித உரிமைகள் மீறல் இல்லையா?

சட்டத்தின் ஆட்சி, நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற புனிதமான முதலாளித்துவச் சட்ட வசனங்களை, நாம் ஆட்சியாளர்களை நோக்கித் திருப்ப வேண்டாமா?



0 comment(s) to... “முகத்திரையை கிழித்த மரண தண்டனை”

0 comments: